கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவனை அமைப்பது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தென் சென்னையில் ரூ.250 கோடியில் பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. 500 படுக்கைகள் வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைப்பதால் தென் சென்னை மக்கள் பயன்பெறுவர்
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சில நோயாளிகள் உயிர் இழக்க நேரிடும்போது மருத்துவர்களை தாக்கியுள்ள சம்பவங்கள் சில இடங்களில் நடந்துள்ளது. பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் அரசு தயங்காது.
அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களின் நிலையை உறவினர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு இனி உலகளாவிய டெண்டர் கோரப்படாது, அதற்கான அவசியம் இல்லை இவ்வாறு அவர் கூறினார்.

