நாகர்கோவில் அருகே அனந்தபாலம் பகுதியை சேர்ந்தவர் ஆல்டோ மைக்கிள் டோனிக் (21). இவருக்கும் வாணியக்குடி பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.இதையடுத்து ஆல்டோ மைக்கிள் டோனிக், தனது காதலியான அந்த மாணவியை உலக்கை அருவி பகுதியில் ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த தகவல் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது தாயார், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தினார். ஆல்டோ மைக்கிள் டோனிக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் ஆல்டோ மைக்கிள் டோனிக்கின் நண்பர்களான கோட்டார் பகுதியை சேர்ந்த சூர்யா, கிஷோர் குமார், காட்வின் மேஸ்வாக் ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவப்பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது

