கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர்” குப்பிகளை அதிக விலைக்கு விற்பனை செய்த அண்ணன், தம்பி ஆகிய இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிரடி நடவடிக்கை.
கடந்த 13.05.2021 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி மேட்டு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு மருந்தகத்தில் வைத்து சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை வாங்கி அதை அதிக லாபத்திற்கு கள்ளச் சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்களான கோவில்பட்டி காந்தி நகர் நேரு நகரைச் சேர்ந்த ஆறுமுக நயினார் மகன்களான சண்முகம் (27) மற்றும் அவரது சகோதரர் கணேசன் (29) ஆகியோரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 46 ரெம்டெசிவிர் குப்பிகளை கைப்பற்றினர். மேற்படி எதிரிகளை விசாரணை செய்ததில் மேற்படி குப்பிகளை மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கள்ளச்சந்தையில் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து இவ்வழக்கின் எதிரிகளான சண்முகம் மற்றும் கணேசன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சபாபதி அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார். மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் எதிரிகளான கோவில்பட்டி& காந்தி நகர் நேரு நகரைச் சேர்ந்த ஆறுமுக நயினார் மகன்களான சண்முகம் மற்றும் அவரது சகோதரர் கணேசன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் திரு. சபாபதி அவர்கள் மேற்படி எதிரிகள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தார்.


