வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுபடி திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியிலும் மற்றும் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் பதட்டமான பகுதிகளில் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு தொடர்ந்து நடைபெற்று வந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இன்று 28.03.2021 திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு தேர்தல் நடைபெறும் நாளான 06.04.2021 அன்று காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கிருஷ்ணாபுரம் முத்து மஹாலில் வைத்து நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறையினருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து தகவல்களை விளக்கிக் கூறினார். மேலும் வாக்குச்சாவடிகளில் ஏதேனும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டால் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும் மாவட்ட காவல் அலுவலகத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவலர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு முறைகளைப் முறையாக பின்பற்றி முகக்கவசம் அணிந்து பணியில் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் சுப்புராஜூ, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைசாமி, சேரன்மகாதேவி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் , ஊரகம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா,நாங்குநேரி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வி ஸ்ரீ லிசா ஸ்டெபிலா தெரஸ், அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு உதயசூரியன் மற்றும் வாக்குப் பெட்டி பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் , அதிகாரிகள் மற்றும் தேர்தல் பிரிவு காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


