தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் கரோனா தொற்று பரவும் வகையில் செயல்பட்ட 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக கவசம் அணியாத 586 பேருக்கு ரூ.1,17,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரவி வருவதால் பொது இடங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு தலா ரூ.200 அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு தலா ரூ.500 அபராதமும் விதிக்கப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (16.01.2022) தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 19 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 166 பேர் மீதும், ஊரக உட்கோட்டத்தில் 83 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 37பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 121 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 34 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 58 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 32 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 57 பேர் மீதும் என மொத்தம் 586 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1,17,200/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு மொத்தம் ரூ.1,18,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் கரோனா பரவலை தடுக்கும்பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள விதிகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி நம்மையும் காப்பாற்றி, நம்மால் பிறருக்கு தொற்று பரவாமல் பிறரையும் காப்பாற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

