பயறு வகை பயிர்கள் சாகுபடி பரப்பை அதிகரித்தல் – கருத்தரங்கு
வேதாரண்யம் ஜன 12
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல் தரிசில் பயறு வகை பயிர்களான உளுந்து, பச்சைபயறு, கொள்ளு, காராமணி, நரிப்பயறு, கொண்டைக்கடலை சாகுபடி பரப்பை அதிகரித்தல் தொடர்பான கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, நாகை சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷா நவாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெருமளவில் நெற்பயிர் சாகுபடியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 65 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் சராசரியாக 3.25 லட்சம் மெ.டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடியும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு நெல் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இருப்பினும் இவ்வாறு ஓர் பயிர் சாகுபடி மேற்கொண்டு வருவது மண்ணின் வளத்தை மட்டுமின்றி உற்பத்தி திறனையும் பாதிக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
மாற்று பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மற்றும் விதை கிராமத் திட்டம் ஆகிய திட்டங்களின்; கீழ்; உளுந்து, பச்சைபயறு, நிலக்கடலை ஆகியவற்றின் விதைகள் மற்றும் பயறு நுண்ணூட்டங்கள் விவசாயிகளுக்கு 50 சதமானியத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சம்பா, தாளடி நெற்பயிர் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் மண்ணின் மெழுகு பதத்தை கொண்டு நெல் தரிசில் உளுந்து அல்லது பச்சைபயறு பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம். பொதுவாக பயறு வகைப் பயிர்கள் 65 முதல் 70 நாட்களில் பயன் தரக்கூடியதாகும். இவை ஈரப்பதம் (அல்லது) குறைந்த பட்ச நீரை கொண்டு அதிக மகசூல் தரக்கூடியதாகும். மேலும் காற்றிலுள்ள தழைச்சத்தை வேர்கள் மூலமாக ஈர்த்து நிலத்திற்கு கிடைக்கச் செய்கிறது. இதன் மூலம் மண்வளம் மேம்படுவதோடு அடுத்து பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களின் தழைச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது என விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகள் உளுந்து மற்றும் பச்சைப் பயறு போன்றவற்றை வரப்பு பயிராகவும் அல்லது ஊடு பயிராகவும் சாகுபடி செய்யலாம். இதன் மூலம் விவசாயிகள் இரு மடங்கு இலாபம் பெறுவதோடு, தங்களுக்கு தேவைக்கான பயறு தானியங்களை தாமே உற்பத்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு விவசாயிகள் சாகுபடி செய்யும் உளுந்து மற்றும் பச்சை பயறு பயிர்கள் மூலம் அதிக உற்பத்தி பெறும்;; பட்சத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் அரசின் குறைந்த பட்ச ஆதார விலைக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய ஆவண செய்யப்படும்.
எனவே விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி நடப்பாண்டு இப்பருவத்தில் அதிகளவில் உளுந்து, பச்சைப் பயறு மற்றும் இதர பயறு வகைகளை சாகுபடி செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கருத்தரங்கில் வேளாண்மை இணை இயக்குநர் ஜாக்குல அகண்டராவ், வேளாண்மை அறிவியல் நிலையம் ஆராய்ச்சியாளர் முனைவர். பாண்டியன், வேளாண்மை துணை இயக்குநர்கள் பன்னீர்செல்வம், மதியரசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (வே) வெங்கடேசன் மற்றும் அரசு அலுலவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

