கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்.
வேதாரண்யம் ஜன 10
நாகப்பட்டினம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கிவைத்தார்.
பின்பு மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழகமுதல்வர் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் கோவிட் – 19 கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் கட்டுபடுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து ‘மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், கொரோனா பெருந்தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் மற்றும் தற்போது ஒமைக்ரான் என்கிற உருமாறிய தொற்று பரவலாக வெளிமாநிலங்களில் பரவ துவங்கியுள்ள நிலையில் தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்று அறிவித்த நிலையில் தற்போது முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள், சுகாதாரபணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி போடும் பணி இன்று துவங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நம் மாவட்டத்தில் முன்களப்பணியாளர்கள், சுகாதாரபணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் 60 வயதிற்குமேற்பட்டவர்கள் சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் என 1,451 நபர்களுக்கு இன்று கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர்டோஸ்) போடும் பணி துவங்கப்பட்டுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி எந்த வகையான (கோவிஷீல்டு மற்றும் கோவேக்ஸின்) தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அதே வகையான கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
நம் மாவட்டத்தை பொறுத்த வரை கடந்த 31.12.2021 வரை சுமார் 11,000 நபர்கள் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுள்ளவர்களாக உள்ளனர். அதன்படி அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் கூடுதல் தடுப்பூசி போடப்படும். மேலும், இதுவரை முதல் தவணை தடுப்பூசி 82.18 சதவீதம் நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி 70 சதவீதமும் போடப்பட்டுள்ளது.
நம் மாவட்டத்தில் இருந்து பல வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதையும் கணக்கிட்டால் சுமார் 90 சதவீதம் நபர்களுக்கு போடப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் 2 கொரோனா மையம் மற்றும் நாகப்பட்டினத்தில் 1 கொரோனா மையம் என 450 படுக்கை வசதி கொண்ட 3 கொரோனா தடுப்பு மையங்கள் தொடங்கப்பட உள்ளது.
முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், மேலும், பொதுமக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு செல்லும் போது தவறாது அவசியம் முகக்கவசம் அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியினை பின்பற்றிட வேண்டுமாறும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலை அலுவலர் உமாமகேஸ்வரன், கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மரு.லியாகத்அலி, மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

