தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.16 கோடி மதிப்பில் செண்பகராமன்புதூர் தென்னை மதிப்பு கூட்டு மைய கட்டடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் –
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோவாளை வட்டம், செண்பகராமன்புதூர் தென்னை மதிப்பு கூட்டு மைய புதிய கட்டடத்தினை (08.01.2022) சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்.அரவிந்த், பார்வையிட்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி கூறி தெரிவிக்கையில் :-
கன்னியாகுமரி மாவட்ட தென்னை விவசாயிகளின் நலனுக்காக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் மூலம் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூபாய் 16 கோடி மதிப்பில், தோவாளை வட்டம், செண்பகராமன்புதூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தென்னை மதிப்பு கூட்டு மையத்தினை மாண்புமிகு தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக, திறந்து வைத்து, தென்னை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்கள்.

இந்த மையத்தில், தென்னை மதிப்பு கூட்டு பொருட்களான, இயல்புநிலை தேங்காய் எண்ணெய் , தேங்காய் உலர் பவுடர், வாகை செக்கு எண்ணெய், தேங்காய் சிரட்டை கரி தயார் செய்யும் வசதிகளோடு, இந்த பொடியினை தூளாக்கி கரி கட்டிகளாக தயார் செய்யும் இயந்திரம், தேங்காய் சிரட்டைகளை தூள் செய்யும் இயந்திரம் மற்றும் தேங்காய் தொலி உரிக்கும் இயந்திரம் ஆகியவை நிறுவப்பட்டுள்ளது.
மேலும் தேங்காய் கொப்பரை காய வைக்க உலர் களங்கள் மற்றும் சூரிய ஒளி உலர்த்திகளும் நிறுவப்பட்டுள்ளது. இந்த மையத்தில் தேங்காய்களை சேமித்து வைக்க 500 மெடன் கொள்ளளவு கொண்ட இரண்டு கிட்டங்கிகள், ஏல அறை, சிப்பம் கட்டும் அறை, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஓய்வு அறை, உணவகம், சில்லறை விற்பனை கடைகள், நிர்வாக அலுவலகம், மற்றும் சிறப்பான சாலை, குடிநீர், தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தென்னை மதிப்பு கூட்டு மையத்தின் வாயிலாக கன்னியாகுமரி மாவட்ட தென்னை விவசாயிகள் வாழ்வு மேம்பட மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு, தென்னை மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பதன் மூலம் அதிக லாபம் ஈட்ட மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்.அரவிந்த், தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் கோட்டாட்சியர் .சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்).எம்.ஆர்.வாணி, துணை இயக்குநர் (வேளாண் வணிகம் மற்றும் விற்பனை).ஹானி ஜாய் சுஜாதா, துணை இயக்குநர் (வேளாண்மை) அவ்வை மீனாட்சி, தோவாளை வட்டாட்சியர்.தாஜ் நிஷா, உதவி பொறியாளர் (வேளாண் விற்பனைத்துறை) ரமேஷ், தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், கல்யாண சுந்தரம், கன்னியாகுமரி மாவட்ட தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

