கொரோனா பரவலைத் தடுக்க அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அழைத்து வர பிரத்தியேக ஆக்சிஜன் வசதி கொண்ட மூன்று 108 ஆம்புலன்ஸ்கள் தயார்-மேலும்-முதல் மற்றும் இரண்டாம் அலையில் தீவிரமாக பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு மூன்றாம் அலைக்கு தயார்ப்படுத்தும் விதமாக சிறப்பு பயிற்சி இன்று நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைப்பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெகுவாக குறைந்திருந்த கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 230 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் புதிய வகையான ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட 12 நோயாளிகள் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்டம் முழுவதிலும் இருந்து கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோயாளிகளை அழைத்து வர 3 சிறப்பு வசதி கொண்ட 108 ஆம்புலன்ஸ்கள் நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இன்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் ஆம்புலன்ஸில் உள்ள முதற்கட்ட செவிலியர்கள்,ஊழியர்களுக்கு நோயாளிகளை அழைத்து வருவதற்காக பயிற்சிகள் வழங்கப்பட்டது.முதல் மற்றும் இரண்டாம் கொரோனா அலைகளில் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பங்களிப்பு அளவிடமுடியாதது.மேலும் தற்போது அதிகரித்து வரும் நோய் தொற்றை எதிர்கொள்ளவும்,நோயாளிகளை பாதுகாப்பாக ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு ஆம்புலன்ஸில் அமைப்பெற்றுள்ள ஆக்சிஜன் வசதிகளை கையாளுவது,நோயாளிகளுக்கு அவசர சமயத்தில் ஆக்சிஜன் கருவி செலுத்துவது போன்ற பயிற்சிகள் இன்று வழங்கப்பட்டது,மேலும் இந்த ஆம்புலன்ஸ் சிறப்பு குறித்து ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் கூறும்போது ” கொரோனா நோயாளிகளை எந்த இடத்தில் இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வர சிஸ்டத்துடன் கூடிய ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகள், கவச உடைகள் வெண்டிலேட்டர்கள், மற்றும் அவசரகால மருந்துகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழக அரசு ஒவ்வொரு 108 ஆம்புலன்சுக்கும் கூடுதலாக ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் ஒதுக்குவதாக கூறியது மகிழ்ச்சியளிக்கிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும் 7200 கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ்கள் மூலம் அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா நோயாளிகளை அழைத்துவர எந்தவிதமான தடங்கலும் இன்றி இதற்கென தனியாக ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.

