விதை கிராமத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் பயறு வகை விதைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
வேதாரண்யம் டிச 31
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டத்தில் திருமண மண்டபத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விதை கிராமத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் பயறு வகை விதைகளை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
விவசாயிகளுக்கு பயறு வகை விதைகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நெற்பயிர் சாகுபடியே பெருமளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒரு பயிர் சாகுபடி மேற்கொள்வதால் விவசாய நிலங்களின் வளம் குறைந்து உற்பத்தி திறன் பாதிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக பயறுவகை பயிர்களை ஊக்குவித்திட தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நடப்பாண்டில் இதன் பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக இலக்கு நிர்ணயக்கப்பட்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. பயறுவகை பயிர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை வேர்கள் மூலமாக நிலத்திற்கு கிடைக்க செய்கிறது. இதன் மூலம் மண் மேம்படுவதோடு அடுத்து சாகுபடி செய்யப்படும் பயிர்கள் இதனால் பயன்பெருகிறது. விவசாயிகள் உளுந்து மற்றும் பச்சை பயிர்களை வரப்புபயிராகவும் (அல்லது) ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம்.
எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்தி இப்பருவத்தில் அதிக அளவில் உளுந்து மற்றும் பச்சைபயறு சாகுபடி மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நமது மாவட்டத்தில் உளுந்து கடந்த ஆண்டு 3.025 ஹெக்டேர் அளவை விட நடப்பாண்டு 36 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பச்சைபயறு கடந்த ஆண்டு 23112 ஹெக்டேர் அளவை விட நடப்பாண்டு 24ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு தேவையான பயறுவகை பயிர்களான உளுந்து பச்சைபயறு சான்று பெற்ற விதைகள் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மற்றும் விதை கிராமத் திட்டத்தின் கீழ் 50சத மானிய விலையில் விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து விவசாயிகளும் சம்பா தாளடி, நெல் அறுவடைக்கு பிறகு உளுந்து, பச்சை பயறு சாகுபடி செய்ய வேண்டுமெனவும், மேலும் அட்மா திட்ட விவசாய பயிற்சிகளை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி தொழில்நுட்பங்களை கடைபிடித்து மகசூல் பெற வேண்டும்.

உளுந்து மற்றும் பச்சைபயறு விதைகள் 32 விவசாயிகளுக்கு 256 கிலோ விநியோகம் செய்யப்பட்டது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் கீழ் மூன்று பயனாளிகளுக்கு வேளாண் காடுகள் திட்டத்தில் தலா 20 மரக்கன்றுகளும், அதனைத்தொடர்ந்து, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மாதிட்டத்தில் 40 விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்களில் பூச்சி மேலாண்மை குறித்த விவசாயிகள் பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆட்சித்தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், கீழ்வேளுர் வட்டார அட்மா தலைவர் கோவிந்தராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநர் திவ்யா, கீழ்வேளுர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகரன், உதவி விதை அலுவலர் கண்ணன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்

