ஆங்கில புத்தாண்டு ஒமைக்ரான் தொற்று அபாயம் உள்ளதால் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்ற மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
வேதாரண்யம் டிச 31
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கடந்த 25.03.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
2022 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கீழ்கண்டவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் மக்கள் வெளியே ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் புத்தாண்டு வழிபாட்டிற்காக கூடும் பட்சத்தில், கொரோனா தொற்று– ஒமைக்ரான் பரவும் அபாயம் உள்ளதால், வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் கோவிட்-19 கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவேண்டும். நாகப்பட்டினம் புதிய கடற்கரை மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை உள்ளிட்ட மாவட்டத்தின் எந்தஒரு கடற்கரை பகுதிகளிலும் புத்தாண்டு தினத்தன்று பொதுமக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பேராலயத்தில் 2022 புத்தாண்டு தொடக்க ஆராதனை திருப்பலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் யாத்ரீகர்கள் பக்தர்கள் நேரடியாக வருவதை தவிர்த்து அவரவர் இல்லங்களில் இருந்து பேராலயத்தின் மூலம் ஒளிபரப்பப்படும் நேரடி தொலைகாட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சியின் வழியாக கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ரிசார்டுகள், ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் கிளப் மற்றும் அரங்குகளில் கேளிக்கை மற்றும் இசைநிகழ்ச்சிகளுக்கு 31.12.2021 மற்றும் 01.01.2022 ஆகிய இரு நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் பொதுமக்கள் முறையே முககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை தவறாது பின்பற்றிட வேண்டும், தவறும் பட்சத்தில் உரிய அபராதம் விதிக்கப்படும். மேலும் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வணிகவளாகங்களின் உரிமையாளர்கள் அரசு விதிமுறைகளின்படி கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றிட வேண்டும். தவறும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இரவு 11.00 மணிவரை மட்டும் உணவு விடுதிகள் செயல்பட வேண்டும் இவ்வாறு நாகை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்

