தாய் காக்கும் திட்டம் துவக்க விழா
வேதாரண்யம் டிச 15
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உயர்பிறப்பு வரிசை தாய்மார்களுக்கான நாகையின் தாய் காக்கும் திட்டம் 2021-2022 துவக்க விழா மற்றும் குடும்பநல கருத்தடை சிகிச்சை செய்துக் கொண்ட ஆண்களுக்கு ஊக்கத் தொகை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
உலக நவீன வாசக்டமி தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்று வரும் முகாம்களில் இதுநாள் வரை 57 ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்து மாநில அளவில் முதலிடத்தில் நம் மாவட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் இருதய வியாதி உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற காரணங்களினால் குடும்ப நல அறுவை சிகிச்சை ஏற்றுக் கொள்ள இயலாத பெண்களின் கணவன்மார்கள் பயன்பெற்றனர்.
இம்முகாமில் கலந்துக் கொண்டு கருத்தடை சிகிச்சை செய்த 57 பயனாளிகளுக்கு ஊக்கத் தொகையாக தமிழக அரசின் சார்பில் ரூ.1,100மும், மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.3,900மும் ஆக கூடுதல் ரூ.5000 மற்றும் பரிசுப் பெட்டகத்தினையும், அதிக அளவில் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை செய்து சாதனை இலக்கை ஈட்டிய மரு முகம்மது சுகைல் அவர்களுக்கு கேடயமும் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள்;, களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

மேலும், உயர் பிறப்பு வரிசையினால் ஏற்படும் மகப்பேறு மரணத்தை தடுக்கும் பொருட்டு நாகையின் தாய் காக்கும் திட்டம் 2021-2022 மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தினால் இனி நம் மாவட்டத்தில் உயர் வரிசை பிறப்பினை குறைத்து மகப்பேறு மரணம் இல்லாத நிலையை உருவாக்க முடியும். இதற்கான முகாம்கள் அனைத்து அரசு மருத்துவ நிலையங்களிலும்; நடைபெற இருப்பதால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள தாய்மார்களில் குடும்பநல அறுவை சிகிச்சை செய்துகொள்ள முன்வரும் தாய்மார்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.600 மற்றும் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.1,400; மொத்தம் ரூ.2000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இவ்விழாவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.விஸ்வநாதன், இணை இயக்குநர் நலப்பணிகள் மரு.ராணி, குடும்பநல துணை இயக்குநர் மரு.ஜோஸ்பின் அமுதா, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.விஜயகுமார், மாவட்ட நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பிச்சைமொய்தீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், மருத்துவர்கள், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சாந்தி, இளநிலை அலுவலர் தினேஷ், குடும்பநல துணை இயக்குநரக அலுவலக பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
படம் உள்ளது
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

