தூத்துக்குடி வருகை தந்த தமிழக ஆா்.என். ரவியை, விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வரவேற்றார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, இன்று (டிச.13) முதல் 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். வாகைகுளம் விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஆளுநரை வரவேற்றார். பின்னர் கார் மூலம் ஆளுநர் எட்டயபுரம் புறப்பட்டுச் சென்றார். ஆளுநா் வருகையையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து அவர், கார் மூலம் எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் இல்லத்திற்கு சென்றார். அங்குள்ள பாரதியார் மார்பளவு சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பாரதி வீட்டில் உள்ள பாரதியாரின் புகைப்படங்களை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து பாரதியார் மணிமண்டபத்துக்கு வந்தார். அங்கு அவரை பள்ளி மாணவ, மாணவிகள் பாரதியார் வேடமணிந்து கைகளில் தேசிய கொடியேந்தி வரவேற்றனர்.
காரில் இருந்து இறங்கிய ஆளுநரும், அவரது மனைவியும் மாணவ, மாணவிகளிடம் சென்றார். அப்போது 5-ம் வகுப்பு மாணவி ஷோபனா தேவி பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும் என்ற கவிதையை பாடினார். இதனை கேட்ட ஆளுநர், ரொம்ப சந்தோஷம் என தமிழில் கூறி மாணவ, மாணவிகளை பாராட்டினார்.

அதன்பிறகு, மணிமண்டபத்தில் பாரிதியாரின் முழு உருவச்சிலைக்கு ஆளுநர் ரவியும், அவரது மனைவியும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள புகைப்படங்களை பார்வையிட்டார். பின்னர் காரில் புறப்பட்டு தூத்துக்குடிக்கு சென்றனர்.

