தூத்துக்குடியில் நடைபெற்ற 68வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ரூ.13 கோடி நலதிட்ட உதவி : கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!
____
தூத்துக்குடியில் நடைபெற்ற 68வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ரூ.13.01 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்பி, அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் வழங்கினர்.
தூத்துக்குடி ஏ.வி.எம். கமவவேல் மகாலில் இன்று (19.11.2021) நடைபெற்ற 68வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு சிறந்த சங்கங்களுக்கான விருதுகளையும், பொது விநியோக திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கான விருதுகளையும், சிறந்த பொது சேவை மையத்தில் பணிபுரிந்த இயக்குநர்களுக்கான விருதுகளையும், மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கான கட்டுரை போட்டி, ஓவிய போட்டி ஆகிய போட்டிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகளையும், வழங்கினார் மேலும் கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு கூட்டுறவு துறையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் செ.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திக்குளம்), எஸ்.ஊர்வசி அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கூட்டுறவு துறையின் மூலம் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதன் பிறகு கூட்டுறவு கடன் மூலம் சிறு தொழில்கள் செய்து வரும் மகளிர் குழுவினர் தாங்கள் உற்பத்தி செய்த விற்பனைப் பொருட்களை விழா நடைபெறும் நுழைவு வாயிலில் அமைத்திருந்தனர். இது குறித்தும் எம்பி கனிமொழி கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து கூட்டுறவு செயல்பாடுகள் குறித்த குறும்படம் காண்பிக்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் கூட்டுறவு துறையின் உறுதிமொழியினை அனைவரும் ஏற்றனர்.
கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது: தூத்துக்குடி மாட்டத்தில் இன்றைய தினம் 68வது கூட்டுறவு வார விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் விவசாய கடன் 570 பயனாளிகளுக்கு ரூ.36.07 லட்சம் மதிப்பிலும், மகளிர் சுய உதவி குழுக்கடன் (88 குழு) 1098 பயனாளிகளுக்கு ரூ.27.66 லட்சம் மதிப்பிலும், சிறு வணிக கடன் 154 பயனாளிகளுக்கு ரூ.71.30 லட்சம் மதிப்பிலும், மாற்றுதிறனாளி கடன் 101 பயனாளிகளுக்கு ரூ.41.37 லட்சம் மதிப்பிலும், கறவை மாடு கடன் 37 பயனாளிகளுக்கு ரூ.32.15 லட்சம் மதிப்பிலும், மத்திய காலக் கடன் (பல்நோக்கு சேவை மையம்) 2 பயனாளிகளுக்கு ரூ.55.00 லட்சம் மதிப்பிலும்,
மகளிர் தொழில் முனைவோர் கடன் 11 பயனாளிகளுக்கு ரூ.69.75 லட்சம் மதிப்பிலும், வீட்டு அடமானக் கடன் 33 பயனாளிகளுக்கு ரூ.26.10 லட்சம் மதிப்பிலும், வீட்டு வசதிக்கடன் 19 பயனாளிகளுக்கு ரூ.12.05 லட்சம் மதிப்பிலும், சம்பளக் கடன் 1 பயனாளிக்கு ரூ.3.00 லட்சம் மதிப்பிலும், நுகர்வோர் கடன் 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலும், வாகனக் கடன் 2 பயனாளிகளுக்கு ரூ.1.00 லட்சம் மதிப்பிலும், பணிபுரியும் மகளிர் கடன் 1 பயனாளிக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 2030 பயனாளிகளுக்கு ரூ.13.01 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு கூட்டுறவு வார விழாவில் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் கூட்டுறவு கடன் என்பது நலிவடைந்தோருக்கு கிடைக்காத சூழ்நிலை இருந்தது. தற்பொழுது அந்த நிலை மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் விவசாயிகள் உள்ளிட்ட எந்த மக்களுக்காக அது தொடங்கப்பட்டதோ மீண்டும் பயன்பெறும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் சென்றடையும் வகையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் வகையில் 21 பரிசு பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


தற்பொழுது கூட்டுறவுத் துறையின் மூலம் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உதாரணமாக வேளாண் விற்பனை பொருட்களான உரம், விதைகள், விலையில்லா அரிசி, காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்டவைகள் மலிவு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பல குடும்பங்களில் வருமானத்தில் பெரிய அளவு செலவு என்பது மருத்துவத்திற்கு மட்டும் செய்யும் சூழ்நிலை உள்ளது.
எனவே கூட்டுறவு மருந்தகத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளுக்கு சுமார் 20 சதவிதம் தள்ளுபடியும், சில குறிப்பிட்ட மருந்துகளுக்கு 60 சதவிதம் வரைக்கும் தள்ளுபடி செய்து நியாயமான விலைiயில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறுகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் எதிர்வரும் 5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 300 கூட்டுறவு மருந்தகங்கள் தொடங்கிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 கூட்டுறவு மருந்தகங்கள் தொடங்கிட பணிகள் நடைபெற்று வருகிறது. கூட்டுறவு துறை என்பது பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த சிறப்பாக செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசியதாவது: தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில்தான் ஏழை, எளிய மக்கள் எளிதாக கடன் பெற முடியும். தேசிய வங்கிகளை அணுகுவதைவிட கூட்டுறவு வங்கிகளை எளிதாக அணுக முடியும். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறார்கள். வங்கிகள் முறையாக செயல்பட வேண்டும். தேவையான கடன் உதவிகளை வழங்க வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைகள் சரிசெய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கான உதவிகளை செய்து தருவதற்கு தேவையான நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணத்தினை நிறைவேற்றிடும் வகையில், மக்களின் நம்பிக்கையினை பெறும் வகையில் இங்குள்ள அனைத்து பணியாளர்கள் செயல்பட வேண்டும். புதிய உறுப்பினர்கள் தற்பொழுது சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கூட்டுறவு நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது. அனைவரும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் கடன் உதவிகளை முறையாக திருப்பி செலுத்தி வாழ்க்கையில் வளம்பெற வேண்டும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா மார்க்கண்டேயன் ஶ்ரீவைகுண்டம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் உரையாற்றினார்கள்
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சிவகாமி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் மரு.வீரபத்திரன், துணை பதிவாளர்கள் ரவீந்திரன், ஜெயசீலன், தி.மாரியப்பன், சந்திரா, சுப்புராஜ், அமுதா, தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணன், முக்கிய பிரமுகர்கள் ஜெகன்பெரியசாமி, ஆனந்தசேகரன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

