தமிழக முதலமைச்சர் தலைமைச் செயலக வளாகத்தில் கனமழை காரணமாக பெரிய மரம் விழுந்ததில் பணியிலிருந்தபோது உயிரிழந்த பெண் தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதியுதவி, வழங்க ஆணை பிறப்பித்து, காயமடைந்த காவலர் மற்றும் தீயணைப்பு படை வீரரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறி, இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க ஆணை பிறப்பித்தார்
முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் தலைமைக் காவலர் கவிதா, வ/47, க/பெ.சாய்பாபா என்பவர் நேற்று காலை சுமார் 09.10 மணியளவில், தலைமைச் செயலக வளாகத்தில் பணியிலிருந்தபோது, கனமழை காரணமாக அங்கிருந்த பெரிய மரம் வேறோடு சாய்ந்ததில், அங்கு நின்றிருந்த தலைமைக் காவலர் கவிதாவின் மீது மரம் விழுந்து, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து, உடல் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது. மேலும், அருகிலிருந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் முருகன், என்பவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே, தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மரத்தை அப்புறப்படுத்தி, உயிரிழந்த கவிதாவின் உடலை மீட்டனர். மீட்பு பணியின்போது, தீயணைப்பு படை வீரர் செந்தில்குமார், வ/51 என்பவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், 1 கார் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது.
மேற்படி சம்பவம் தொடர்பாக, B-3 கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காயமடைந்த தலைமை காவலர் முருகன் மற்றும் தீயணைப்பு படை வீரர் செந்தில்குமார் ஆகியோர் சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் பணியின்போது மரம் விழுந்து இறந்த பெண் தலைமைக் காவலர் கவிதாவின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து, அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்க ஆணையிட்டார்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று காலை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று இறந்து போன பெண் தலைமைக் காவலர் கவிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமைக் காவலர் முருகன் மற்றும் தீயணைப்பு படை வீரர் செந்தில்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து விரைவில் குணமடைய ஆறுதல் கூறினார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்க ஆணையிட்டார்
இந்நிகழ்ச்சியின்போது, மாண்புமிகு தமிழக அமைச்சர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.காப., மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இறந்து போன கவிதா, தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில், கணவர் சாய் பாபா, 2 மகன்கள் மற்றும் 1 மகளுடன் வசித்து வந்தார். மூத்த மகன்அருண்குமார், வ/22, சேலத்தில் உள்ள பொறியியல் கல்லூரியிலும், மகள் ஸ்நேகபிரியா, பெ/வ.20 இளங்கலை முதலாமாண்டும், மகன் விஷால், பாரிமுனையில் உள்ள பள்ளியிலும் படித்து வருகின்றனர்.
காயமடைந்த தலைமைக் காவலர் முருகன், வ/46, த/பெ.குப்புசாமி என்பவர் ராயபுரம், சிங்காரத்தோட்டம் காவலர் குடியிருப்பில், மனைவி மஞ்சுளா, மகன் ஜெயசூர்யா, வ/16 மற்றும் மகள் ஜெயஶ்ரீ, வ/11 ஆகியோருடன் வசித்து வருகிறார்.
காயமடைந்த தீயணைப்பு வீரர் செந்தில்குமார்,வ/51, த/பெ.சதாசிவம் என்பவர் வண்ணியம்பதி, தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்பில், மனைவி, மகன் ராஜேஷ், வ/24 மற்றும் மகள் காவியா, வ/19 ஆகியோருடன் வசித்து வருகிறார்.

