சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் அரசு அலுவலக பணிகள் நடந்து வருகின்றன. கரோனா பாதிப்புகளால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிக்கு சென்று வந்தனர். இதன்பின்பு தமிழகத்தில் பரவல் குறைந்த சூழலில் இதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அமைந்துள்ள பகுதி அருகே கனமழையால் பெரிய மரம் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்துள்ளது. இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் பலியானார். போக்குவரத்து காவலர் ஒருவர் காயமடைந்து உள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்களும் சேதமடைந்தன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

