தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என மீனவர்கள், கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி மாரநாதா பீச் ரோடு பழைய கடற்கரை மீனவ சங்கம், ராஜீவ் காந்தி நகர் மீனவர் நல பாதுகாப்பு சங்கம்,திரேஸ்புரம் அலை ஓசை சங்கு குளிப்பவர் முன்னேற்ற சங்கம், சாமிநத்தம் ஊராட்சிக்குட்பட்ட நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது: எங்கள் ஊரைச் சேர்ந்த ஏராளமானோர் ஸ்டெர்லைட் ஆலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்து வருகிறோம். தற்போது ஆலை முடப்பட்டுள்ளதால் அனைவரும் வேலை இல்லாமல் வறுமையில் வாடும் நிலையில் இருக்கிறோம். ஆலை எங்கள் கிராமத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தது. எங்கள் கிராமத்தில் 30 லட்ச ரூபாய் செலவில் குளத்தை தூர்வாரி நீர்மட்டம் உயர வழி ஏற்படுத்தினார்கள்.
இதன் காரணமாக கிராமத்தில் வேலையில்லாமல் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை மாறி உள்ளது. பெண்களை தொழில் முனைவோராக மாற்று முயற்சியாக நாப்கின் உற்பத்தி மையத்தை தொடங்கியுள்ளனர். அதன் மூலமாக மகளிர் குழுக்களை சேர்ந்த 25 பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்துள்ளனர். இப்படி தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

