விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை திருமணம், பெண்கள் குழந்தைகள் காணவில்லை, போக்சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவின் பேரில் காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் அனைத்து பள்ளிகள் தோறும் மாணவ, மாணவியற்களுக்கு காவல் ஆய்வாளர் மூக்கன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கபட்டனர்.
அதன் அடிப்படையில் இன்று காரியாபட்டி அமலா உயர்நிலைப்பள்ளியில் அருப்புக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளர் சகாயஜோஸ் காவல் ஆய்வாளர் மூக்கன், சார்பு ஆய்வாளர்கள் அசோக்குமார், ஆனந்தஜோதி ஆகியோர் நேரில் சென்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது பேசிய அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சகாயஜோஸ் பேசும்போது பாலியல் போன்ற பிரச்சனை சம்பவம் நடந்தாலோ, பாலியல் துன்புறுத்தலில் யாராவது ஈடுபட்டாலோ உடனடியாக 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். வேலைக்கு சென்று வரும் பெண்கள் பிரச்சினைகளை சந்தித்தால், அவர்களது பாதுகாப்பு உதவிக்கு என 181 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் நபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது. குழந்தை திருமண தடை சட்டத்தின் படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பள்ளி மாணவிகளுக்கு குட் டச், பேடு டச், & டோன்ட் டச் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் காரியாபட்டி அமலா உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மெர்ஸி உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

