நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி ஊராட்சி மூங்கில்குடி கிராமத்தில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாராய விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்தப் பகுதி பெண்கள் இரு தினங்களுக்கு முன் நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்ததாகவும், வேளாங்கண்ணி போலீசாரிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் வாட்ஸாப் செய்தி பரவி வருகிறது.
இந்நிலையில் வேளாங்கண்ணிபோலீசார் தரப்பில் இருந்து இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இன்று ஆவேசமடைந்த மூங்கில்குடி கிராம பெண்கள் அந்த பகுதி மயானம் அருகே பொது மக்களுக்கும், பெண்களுக்கும் இடையூறாக சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்த கும்பலை அடித்து விரட்டினர். அப்போது சாராய விற்பனை செய்த கும்பல் அங்கிருந்து சாராய பாக்கெட்டுகளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கிராம பெண்கள் சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி சாலையில் வீசி எறிந்து அதனை உடைத்தனர். சாராயம் விற்ற கும்பலை பெண்கள் விரட்டியடித்து சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி எறிந்து ஆவேசமாக உடைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

