வேதாரண்யத்தில்
மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு பிராச்சார வாகனம்! – நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்
—————-
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் பற்றி பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று விளக்குவதற்காக பிரச்சார வாகனம் இன்று துவங்கி வைக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மூலம் ஒவ்வொரு நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு நேரடியாகச் சென்று வடகிழக்குப் பருவமழை, தென்மேற்கு பருவமழை, கோடைக்காலங்களில் பெய்யும் மழைநீரை பராமரிக்கும் முறைகள், கூரையின் மேல் விழும் மழைநீரை சேகரித்தல், குழாய் கிணறு மூலம் மழைநீரை சேகரிக்கும் முறைகள், நேரடியாகவோ அல்லது நிலத்தடியிலோ செலுத்தி எப்படி சேமிப்பது என்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் குறும்படமாக திரையிட ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும், இனி வரும் காலங்களில் பொதுமக்கள் மழைநீரை சேமிப்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, குடிநீர் தட்டுப்பாடு குறைய வாய்ப்பாக அமையும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் கருணாகரன், உதவி நிர்வாகப் பொறியாளர் முருகேசன், உதவிப் பொறியாளர்கள் பிரபாகரன், தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி தொகுப்பு : லயன்
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்

