திருச்சி அருகே இறந்த தாயின் உடலை, ஜெபம் செய்து உயிர்த்தெழ வைப்பதாக, மகள்கள் மூட நம்பிக்கையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சொக்கம்பட்டியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியை மேரி. இவர், திருமணமாகாத தனது மகள்கள் ஜெசிந்தா, ஜெயந்தியுடன் ஊருக்கு வெளியே வசித்து வந்துள்ளார். இவர்கள் அடிக்கடி ஜெபம் செய்து வந்ததாக கூறப்படும் நிலையில், உடல்நிலை சரியில்லாத மேரியைப் பார்க்க உறவினர் ஒருவர் வந்துள்ளார். அப்போது, மேரி இறந்துவிட்டதை அறிந்த அவர், அடக்கம் செய்யுமாறு கூறிய நிலையில், இறந்த மேரியை ஜெபம் செய்து உயிர்த்தெழ வைப்பதாக அவரது மகள்கள் கூறி உள்ளனர்.
தகவலறிந்து உடலை மீட்க மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உள்ளனர். அப்போது, உடலை தர மறுத்த மகள்கள் இருவரும், தங்களின் தாய் இறக்கவில்லை என்றும், உடலை ஜெபம் செய்து உயிர்த்தெழ வைப்போம் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேரியின் உடல் அழுகி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

