ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தலில்
மக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையாக நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 2019ஆம் ஆண்டு நிரப்பப்பட்ட பதவி இடங்களில் இறப்பு, பதவி விலகல் காரணங்களால் கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரையில் ஏற்பட்ட 27 பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, நம்பியூர், டி .என். பாளையம், பவானிசாகர் ஆகிய ஊராட்சிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு எண் 5 -க்கான தேர்தல், ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 4 -க்கான தேர்தல், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 10 -க்கான தேர்தல், 4 ஊராட்சி தலைவர்கள், 20 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் என மொத்தம் 27 பணியிடங்களுக்கு தேர்தல் நடைபெற இருந்தது.
இதில் 7 பதவிக்கு போட்டியின்றி ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். இதையடுத்து 20 பதவிகளுக்கு 65 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது. நேற்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பெட்டிகள், வாக்களிப்பு மறைவு அட்டைகள், உலோக முத்திரை, பாலித்தீன் உறை, வாக்குச் சீட்டுகள், வாக்குப் பெட்டியில் பயன்படுத்தக்கூடிய தாள் முத்திரைகள், எழுத்து பொருட்கள் படிவங்கள், அறியாத மைக்குப்பிகள், கொரோனா பாதுகாப்பு பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. ஈரோட்டில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக 144 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையாக நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மக்கள் சிரமமின்றி வாக்களிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டங்களின் தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பதட்டமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கும் வகையில் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து வாக்கு பதிவுகளை செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 39 ஆயிரத்து 755 பேர், பெண் வாக்காளர்கள் 40 ஆயிரத்து 66 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 என மொத்தம் 80 ஆயிரத்து 225 பேர் வாக்களிக்க உள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.

