வேதை பெரியார் மா.மீயின் முதலாமாண்டு நினைவு தினம்
வேதாரண்யம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த மா.மீனாட்சிசுந்தரம் கடந்த ஆண்டு காலமானார். அவரின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1937ஆம் ஆண்டு மாசிலாமணி-செல்லம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாக பிறந்தார். 1954 முதல் திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டு கட்சி பணியாற்றினார். இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட கழகம் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கு பெற்று சிறை சென்றுள்ளார்.
1971ஆம் ஆண்டு முதன் முறையாக சட்டமன்றத்திற்கு வேதாரண்யம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976ல் மிசாவில் கைதாகி சிறை சென்றார். மேலும் 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்வானார். பின்னர் வேதாரண்யம் நகர்மன்றத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
இவரது குடும்பத்தினர் அனைவருக்கும் பெரியாரின் கொள்கைபடி சீர்திருத்த திருமணங்களை செய்து வைத்ததால் இவர் வேதை பெரியார் என அனைவராலும் அழைக்கப்பட்டார்.
இவர் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி, நிலவள வங்கி, நகர கூட்டுறவு வங்கி, ஆயக்காரன்புலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல கூட்டுறவு வங்கிகள் வர காரணமாக இருந்தவர். மேலும் அவற்றில் தலைமை பொறுப்பிலும் இருந்துள்ளார்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மா.மீனாட்சிசுந்தரத்தின் நினைவு நாளில் கட்சி உறுப்பினர்கள், நகர வாசிகள், சிறுகுறு உப்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

