தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசு அறிவித்துள்ள தமிழ்நாட்டு மரங்களின் அடையாள சின்னமான 42 பனை மரங்களை வெட்டியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு – மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனுமதியின்றி பனை மரங்களை வெட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
100 வருடங்களுக்கு மேலாக நீண்ட நாட்களுக்கு பல்வேறு வகை பலன்களை தரக்கூடிய பனை மரங்கள் வெட்டப்பட்டு அழிந்து விடக்கூடாது என்பதற்காகவும், அதை பாதுகாத்து வளர்க்க வேண்டும் எனவும், அவற்றை வெட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தமிழ்நாட்டு மரங்களின் சின்னமாக பனை மரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்தையாபுரம் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பனை மரங்களை அரசு அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்களுக்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் சூரங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. குருசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, உரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த சவரிமுத்து மகன் செல்வராஜ் என்பவர் சுமார் 42 பனை மரங்களை அரசு அனுமதியின்றி வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பெரியசாமிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்படி பனை மரங்களை வெட்டிய செல்வராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.*
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.*

