தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.28.31 கோடி மதிப்பீட்டில் ஸ்டெம் பார்க் மற்றும் சிட்டி லேனிங் சென்டர் பணிகளுக்கு அமைச்சர் பெ.கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.28.31 கோடி மதிப்பீட்டில் ஸ்டெம் பார்க் மற்றும் சிட்டி லேனிங் சென்டர் அமைப்பதற்கான பூமி பூஜையில் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தலைமையில் இன்று அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு நகரங்கள் திட்டத்தில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அம்பேத்கர் நகரில் ஸ்டெம் பார்க் மற்றும் சிட்டி லேனிங் சென்டர் அமைக்கப்பட உள்ளது.
இந்த பூங்காவின் 150 இருக்கைகள் கொண்ட மினி திரையரங்கம், 6ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களுக்கு உபயோகமாக படிக்கும் பாடத்தினை இங்கு நேரடியாக பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் அறிவியல் மண்டலம், ஆற்றல் மண்டலம், கணித மண்டலம், பொறியியல் மற்றும் பொருள் அறிவியல், விண்வெளி மண்டலம், பரிமாண மாதிரிகள், உட்புற கண்காட்சிகள், ஒரு கோளத்தில் அறிவியல் மெய்நிகர் கண்காட்சி ஆகியவை இந்த பூங்காவில் வடிவமைக்கப்பட உள்ளது. நமது பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் நகரின் சுற்றுப்பகுதியில் உள்ள அனைவருக்கும் இந்த பூங்கா பள்ளி, கல்லூரி மற்றும் உயர்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, முன்னிலை வகித்தார். மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன்சுரேஷ், உதவி செயற்பொறியாளர் சரவணன், வட்டாட்சியர் ஜஸ்டின், முக்கிய பிரமுகர்கள் ஆனந்தசேகரன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்

