நாகை மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து அடிப்படை வசதிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டது. இன்று 01.09.2021 முதல் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி, நாகூரில் தேசிய மேல்நிலைப்பள்ளி, அரசினர் உயர்நிலைப் பள்ளி, மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் அடிப்படை வசதிகள், வகுப்பறைகள், சமையலறை மேலும் மதிய உணவிற்கு தேவையான பொருட்களையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது
தமிழக முதல்வர் உத்தரவின் படி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. வாரத்தின் 6 நாட்கள் பள்ளி வேலைநாட்களாக செயல்படும். 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி வகுப்புகள் நடைபெறும். ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டும் சமூக இடைவெளியுடன் அமர வேண்டும். மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், வகுப்பிற்கு செல்வதற்கு முன் கட்டாயமாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு நாள்தோறும் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 143 அரசு பள்ளிகளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகளில் பின்பற்றபடுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக கண்காணிப்பு மற்றும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
நாகை மாவட்ட செய்தியாளர்

