தூத்துக்குடியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 3004 பேருக்கு ரூ.34.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் மற்றும் 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நலன் – மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கலந்துகொண்டு, 3004 தொழிலாளர்களுக்கு ரூ.34.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசியதாவது: முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அரசுத்துறை அலுவலர்கள் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு பல்வேறு ஆதரவுகள் உள்ளது. ஆனால் பல்வெறு தொழிலாளர்கள், கட்டிட பணியாளர்கள், விவசாய கூலிகள் உள்ளிட்டவர்களுக்கு முதுமையில் எவ்வித ஆதரவு இல்லாமல் இருப்பதை எண்ணி அவர்களின் வாழ்க்கைக்கு உதவிடும் வகையில் தொழிலாளர் நல வாரியங்களை அமைத்து அதன் மூலம் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து மரணம் உதவித்தொகைகள், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் திடத்தினை செயல்படுத்தினார்கள். கடந்த 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் இத்திட்டங்கள் முறையாக வழங்காமல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியை பின்பற்றி ஆட்சி பொறுப்பை ஏற்று 50 நாட்களில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் 50000 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் இலக்கினை அடைந்து இன்று (30.07.2021) சென்னையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழகம் முழுவதும் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 3004 தொழிலாளர்களுக்கு திருமணம், கல்வி, இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் ரூ.34 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து தொழிலாளர்களையும் நல வாரியங்களில் பதிவு செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர் நலத்துறை அலுவலர்களும், வருவாய் துறை அலுவலர்களும் இணைந்து அனைத்து பகுதிகளிலும் முகாம்களை நடத்தி நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரையும் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.
இக்கூட்டத்தில் மகளிர் திட்ட திட்ட இயக்குநர் பிச்சை, தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அப்துல் காதர் சுபயர், உதவி ஆணையர் திருமுருக பிரசன்னா, தொழிலாளர் உதவி ஆணையர் விஸ்வநாதன் மற்றும் அலுவலர்கள், தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

