தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திமரப்பட்டி எம்.ஜி.ஆர் சிலை அருகே ஊரடங்கை முன்னிட்டு அத்திமரபட்டி அனைத்து சமுதாய அன்பு உறவுக்குழு என்னும் அமைப்பு சார்பாக சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்துவரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என 200 பேருக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். அதே போன்று மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு உரையாற்றினார்.
இதற்கான ஏற்பாடுகளை அத்திமரப்பட்டி அனைத்து சமுதாய அன்பு உறவுக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, அத்திமரப்பட்டி விவாசய சங்க தலைவர் . அழகுராஜா, விவசாய சங்க நிர்வாகி டேனியல் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் . கணேஷ், முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலை, தனிப்பிரிவு காவலர் முருகன் உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

