தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 60 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. செல்போன்களை மீட்ட தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன் தலைமையில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவசங்கரன், உதவி ஆய்வளார்கள் திரு. சுதாகரன், திரு. அச்சுதன், தலைமை காவலர் திரு. சுப்புராஜ், காவலர்கள் திரு. பேச்சிமுத்து, திரு. திலிப், திரு. மகேந்திரன் திரு. எடிசன், திரு. புவனேஷ் திரு. வசந்தபெருமாள் திரு. புகழேந்திரன் மற்றும் திரு. சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார்.
அதன்படி மேற்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து ஏற்கனவே கடந்த 15.10.2020 அன்று 102 செல்போன்களும், 09.12.2020 அன்று 60 செல்போன்களும், 12.02.2021 அன்று 61 செல்போன்களும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
அதன்பிறகும் தொடர்ந்த சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்டையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள 60 செல்போன்களை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEII) எண்ணை வைத்து கண்டு பிடித்து, அவைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 283 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட 60 செல்போன்களை, அதன் உரிமையாளர்களிடம் இன்று (02.07.2021) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஒப்படைத்தார்.
பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு ஆய்வாளர், 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய சைபர் கிரைம் பிரிவு கடந்த ஒரு மாத காலமாக செயல்பட்டு வருகிறது. சைபர் கிரைம் எனப்படும் கணினி வழி குற்றங்கள் மற்றும் தொலைந்த செல்போன்களை பற்றி புகார் அளிக்க காவல் நிலைய செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்களது சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை நேரடியாக மாவட்ட காவல் அலுவலகத்திலே புகார் அளிக்கலாம். மேலும் ஏடிம் கார்டு எண் கேட்டு வரும் போலியான தொலைபேசி செய்தியை நம்பி பணத்தை இழந்தவர்கள், சமூக ஊடகங்கங்களில் அவதூறான செய்திகள் பரப்புபவர்கள் மீது புகார் அளிக்கவும், இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாக ஏமாற்றுபவர்கள் மீதும் இக்காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம். இதுவரை நான்கு கட்டமாக மொத்தம் 283 தொலைந்த செல்போன்களை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர். வங்கி விபரங்கள் போன்ற உங்களுடைய தனிப்பட்ட விபரங்களையும், புகைப்படங்களையும் செல்போனில் வைக்காதீர்கள். கவனமில்லாமல் உங்கள் செல்போன் தொலைந்து, அது ஒரு வேளை சமூக விரோதிகள் கையில் கிடைத்து விட்டால் அதை அவர்கள் பல்வேறு சட்ட விரோதமான காரியங்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து உட்பட காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் செல்போன் உரிமையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

