சென்னை பெருநகர காவல் ஆணையாளர், மாதவரம் ரவுண்டனா அருகில் போக்குவரத்து புறக் காவல் நிலையத்தை திறந்து வைத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ANPR கேமராக்கள் உட்பட 64 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்து, போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு போக்குவரத்து பணிக்கான உபகரணங்களை வழங்கினார்.
பிற மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரும் நுழைவு வாயில்களில் ஒன்றான மாதவரம் GNT சாலை மற்றும் 100 அடி சாலை சந்திப்பான மாதவரம் ரவுண்டனா, சென்னையிலுள்ள பல பகுதிகளை இணைக்கும் சாலை சந்திப்பு என்பதால், அதிகளவில் வாகனங்கள் செல்லும் இடமாக உள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில், மாதவரம் ரவுண்டனாவில் போக்குவரத்து காவல் சார்பில் நவீன வசதிகளுடன் போக்குவரத்து புறக்காவல் நிலையம் மற்றும் அப்பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெற்று முடிவுற்றது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., இன்று மாதவரம் ரவுண்டனா அருகில் புதிதாக அமைக்கப்பட்ட மாதவரம் போக்குவரத்து புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்ட 4 ANPR அதிநவீன கேமராக்கள் மற்றும் 60 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆணையாளர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், மாதவரம் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு, ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தினர் வழங்கிய போக்குவரத்து காவல் பணிக்கான உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் பிரதிப்குமார், இ.கா.ப,. இணை ஆணையாளர்கள் .ஆர்.லலிதா லஷ்மி, இ.கா.ப., (போக்குவரத்து/வடக்கு), ஏ.டி.துரைகுமார்,இ.கா.ப., (வடக்கு மண்டலம்), துணை ஆணையாளர் மருத்துவர் ஏ.பிரதீப்,இ.கா.ப.,, (போக்குவரத்து/வடக்கு), ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிட்டேட் நிறுவன அதிகாரிகள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.


