தேவதானப்பட்டி அருகே வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி பகுதியில் தனியார் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3100 வெளி மாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவாவில் இருந்து கேரள மாநிலத்திற்குக் கடத்தி வரப்பட்ட சுமார் 3100 ( 750 மில்லி அளவுடையவை) மதுபாட்டில்களை தேவதானப்பட்டி அருகேயுள்ள புல்லக்கா பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோப்பில் பதுக்கி வைத்திருந்தது குறித்து பெரியகுளம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே அவர்களின் வழிகாட்டுதலின் படி தேவதானப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் முத்துமணி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி ரவி என்பவரது தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3100 வெளி மாநில மதுபாட்டில்களை கண்டுபிடித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சம்பவ இடத்தில்நேரில் ஆய்வு மேற்கொண்டார். தப்பியோடிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வெளி மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


