தெற்கு ரயில்வே அளவில் முதன் முதலாக மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின் துவக்கி வைத்தார்.
இந்த புதிய இயந்திரம் வெளி காற்றினை உறிஞ்சி, பின்பு அதன் ஈரப்பதத்தை உலரச் செய்கிறது. அடுத்த செயல்பாடாக ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் வாயுக்களை பிரித்து எடுக்கிறது. 50 விநாடிகளுக்கு ஒருமுறை இந்த நைட்ரஜன் வாயு வெளியேற்றப்படுகிறது. இரு உலைகளில் சேமிக்கப்படும் ஆக்சிஜன் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு மருத்துவமனைக்குள் அனுப்பப்படுகிறது. இன்று புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரம் நிமிடத்திற்கு 250 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் திறன் கொண்டது. இதுவரை வெளியிலிருந்து திரவ மருத்துவ ஆக்சிஜன் கொண்டுவந்து பயன்படுத்தப்பட்டது.
தற்போது மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிசன் மருத்துவமனை அருகே உள்ள இந்த இயந்திரம் மூலம் தயாரித்துக் கொள்ள முடியும். மதுரையில் இது மாதிரியான ஆக்சிசன் தயாரிப்பு இயந்திரம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ரயில்வே மருத்துவமனையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் லலித் குமார் மன்சுகானி, முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கர், டாக்டர் ரேவதி, முதுநிலை கோட்ட பொறியாளர் வில்லியம்ஸ் ஜாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

