டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனி விமானத்தில் நேற்று டெல்லி சென்றார் முதல்வர் ஸ்டாலின். நேற்று மாலை பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள், மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு உள்ளிட்ட தொழில்முறை கல்விக்கான அனைத்து நுழைவுத் தோ்வுகளும் ரத்து, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுதல் மற்றும் தமிழகத்திற்கு தேவையான கோரிக்களை மனு அளித்து பேசினார்.
இந்நிலையில், அரசு ரீதியான சந்திப்புகளுக்குப் பிறகு, முதல்வா் மு.க.ஸ்டாலின், இன்று அரசியல் தொடா்பான சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் உள்ள தமிழ்நாடு பழைய இல்லத்தை பார்வையிட்ட பின்னர், காங்கிரஸ் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.
தனது இல்லத்திற்கு வருகை தந்துள்ள திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை, சோனியா காந்தி, ராகுல் காந்தி வரவேற்றனர். பின்னர் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு சோனியா, ராகுல் வாழ்த்து தெரிவித்தனர். சில நிமிட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அங்கிருந்து முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார். இந்த சந்திப்பின்போது துர்கா ஸ்டாலினும் உடனிருந்தார். முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக சோனியா காந்தியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

