தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் என 29 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 4 பேர் கைது – அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் – கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அனைத்து உட்கோட்டங்களிலும், அந்தந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து கொலை, கொள்ளை, ரவுடித்தனம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற அனைத்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கடந்த 5 மாதங்களில் மட்டும் 75 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் திரு. பென்சிங், திரு. மாணிக்கராஜ், திரு. சாமுவேல், திரு. மகாலிங்கம், திரு. செந்தில், திரு. திருமணி மற்றும் திரு. முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (17.06.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மட்டக்கடை பஜார் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மட்டக்கடை வடக்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மரிய அந்தோணி சகிலன் (24), குருஸ்புரம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரோசாரி மகன் மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் (24), மட்டக்கடை வடக்கு ராஜா தெருவைச் சேர்ந்த கென்னடி மகன் சிம்சன் (25) மற்றும் எஸ்.எஸ். பிள்ளை தெருவைச் சேர்ந்த சகாயராஜ் மகன் சந்தனகுமார் (33) ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில், இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் 29 கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் கொலை மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும் நேற்று தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் ரவுடித்தனம் செய்து, ஒருவரிடம் தகராறு செய்து கத்தியால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 அரிவாள் மற்றும் 2 கத்திகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள எதிரிகளில் மரிய அந்தோணி சகிலன் மீது தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், மத்தியபாகம், சிப்காட் மற்றும் ஏரல் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் உட்பட 11 வழக்குகளிலும், மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் மீது தூத்துக்குடி வடபாகம், சிப்காட் மற்றும் தெர்மல்நகர் ஆகிய காவல் நிலையங்களில் கொள்ளை, கொலை மிரட்டல், உட்பட 8 வழக்குகளிலும், சிம்சன் மீது தூத்துக்குடி வடபாகம், தூத்துக்குடி தென்பாகம், ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் உட்பட 10 வழக்குகளில் ஈடுபட்டதும் குறிப்பிடதக்கது.
எதிரியை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

