கடந்த 2020ம் வருடம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த பென்னிக்ஸும் அவர் தந்தை ஜெயராஜும் கோவில்பட்டி சிறையில் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியது. பொதுமக்கள் முதல் முக்கிய அரசியல் தலைவர்கள் வரை இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். காவல்துறையினர் தாக்கியதால் தான் இந்த மரணம் நிகழ்ந்தது என்று கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பியாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார்.
சாத்தான்குளம் சம்பவம் காவல்துறை மீது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதை போக்கும் வகையில் எஸ்பி ஜெயக்குமார், சாத்தான்குளத்தில் சமாதான கூட்டங்கள் நடத்தினார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று போலீசாரின் நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தார். ஒரே காவல்நிலையத்தில் நீண்ட காலமாக பணிபுரிந்த காவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். அனைத்து காவல் நிலையங்களிலும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மற்றும் அந்தந்த பகுதி டிஎஸ்பிகளின் செல்போன் எண்களை எழுதி வைக்குமாறு உத்தரவிட்டார். மேலும் தன்னிடம் புகார் கொடுக்க வருபவர்களிடம் கனிவாக நடந்து கொள்வது கடந்த வருடம் கொரோனா முதல் அலை பரவலின் போது ஏழை எளியவர்கள்,ஆதரவற்றோருக்கு நிவாரண உதவிகள் வழங்கியது பலரது பாராட்டை பெற்றது.
இந்நிலையில் தற்போது கரோனா 2வது அலை தீவிரம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போதும் ஏழை எளியவர்கள்,ஆதரவற்றோருக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார். மேலும் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு சப்டிவிஷன்களிலும் போலீசார், நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். கரோனா பெருந்தொற்று காலத்தில் போலீசார் நிவாரண உதவிகள் வழங்கி வருவது பொதுமக்களிடம் பாராட்டு பெற்றுள்ளது. மொத்தத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரின் செயல்களால் போலீசார் பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்

