தூத்துக்குடி மாவட்டத்தில் தென் பகுதி அரசியல் என்பது தாமிரபரணி ஆற்று பாசனத்தை மையமாக கொண்டதுதான். பெருவாரியாக உள்ள விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும்படி செய்வோருக்கு அப்பகுதி விவசாயிகளின் ஆதரவு உண்டு. குறிப்பாக ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அரசியல்வாதிகளின் அரசியல் விவசாயிகளை மையமாக வைத்ததே.
அந்தவகையில் திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதாராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் டீமோடு சென்று விவசாயத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டனர்.
இந்தநிலையில் 04.06.2021 அன்று சாயர்புரம் பேய்க்குளம் நிலச்சுவன்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்க சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயபொன்ராஜ், பொருளாளர் கார்த்திகேயன், துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ், விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். இதில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள் விவசாயத்திற்கு தண்ணீர் எப்பொழுதும் தடையின்றி கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். விவசாயிகளுக்கு வாழைத்தார் நிரந்தர நல்ல விலை கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அப்போது ஊர்வசி அமிர்தராஜ், நான் எம்.எல்.ஏவாக இல்லாதபோதே இந்த பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறேன். இப்போது உங்கள் எல்லாருக்கும் நல்லது செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுபோல் நமது மாவட்டத்திற்கு ஒரு நல்ல எம்.பியாக கனிமொழி, நல்ல அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கிடைத்திருக்கிறார்கள்.
இனிமேல் விவசாயிகளின் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் இவர்கள் மூலம் நமது முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றி தருவேன். நானும் இப்பகுதி விவசாயிகளுக்கு அரசு மூலம் கிடைக்ககூடிய அனைத்து திட்டங்களையும் பெற்று நிறைவேற்றி தருவேன். விவசாயிகள் செழிப்பாக இருந்தால் தான் இப்பகுதி முன்னேறும். ஆகையால் நான் எப்பொழுதும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பேன்’’ என்றார். துணை செயலாளர் நல்லாசிரியர் ஞானராஜ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் விவசாயிகள் அருணாசலம், நித்யானந்தம், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஜி ரவி, சாயர்புரம் நகர பொறுப்பாளர் அறவாழி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பாலமுருகன், இளைஞரணி கண்ணன், சிவத்தையாபுரம் துரையரசு, முன்னாள் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் எடிசன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயசீலன் துரை, துணைத் தலைவர் இசைசங்கர், ஸ்ரீவைகுண்டம் வடக்கு வட்டார தலைவர் சொரிமுத்துபிரதாபான், சாயர்புரம் நகர தலைவர் ஜேக்கப், முன்னாள் கவுன்சிலர் பிச்சைமணி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

