தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.
கடந்த 04.06.2021 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வட்டன்விளை பேருந்து நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த அரசால் தடைசெய்யப்பட்ட ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 450 கிலோ எடையுடைய புகையிலைப் பொருட்களை கைப்பற்றி திருச்செந்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து எதிரிகள் இருவரை கைது செய்தும், கடந்த 03.06.2021 அன்று மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து செய்த போது நத்தைகுளம் விலக்கில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 70 மது பாட்டில்கள் மற்றும் பணம் ரூபாய் 2,40,000/- ஆகியவற்றை கைப்பற்றி எதிரிகளை கைது செய்த திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், உதவி ஆய்வாளர் சுந்தரம், தலைமை காவலர்கள் ராஜ்குமார், மாரியப்பசாமி, ஆத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் இசக்கியப்பன், திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் சொர்ணராஜ், மாரிமுத்து, அரி உத்திரம், காவலர் அசோக்குமார் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 02.06.2021 அன்று புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கத்தாகுறிச்சியை சேர்ந்த பெருமாள் என்பவரின் வீட்டு பின்புறம் உள்ள மாட்டுத்தொழுவத்திலிருந்து ஆடுகளை திருடிச் சென்ற எதிரிகள் மூன்று பேரை சில மணி நேரத்தில் கைது செய்து, எதிரிகள் திருடிய ஒரு ஆட்டை மீட்டும், எதிரிகள் ஆடு திருடி விற்பனை செய்த ரூபாய் 32,000/- பணம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்த புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், உதவி ஆய்வாளர் செல்வன், மணியாச்சி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பொன்முனியசாமி, நாரைக்கிணறு காவல் நிலைய முதல் நிலைக் காவலர் கொடிவேல், கடம்பூர் காவல் நிலைய காவலர் விடுதலை பாரதி கண்ணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 04.06.2021 அன்று கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 9,30,000/- மதிப்பிலான 1242 கிலோ எடையுடைய புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு ஈச்சர் வாகனத்தை கைப்பற்றி எதிரிகளை கைது செய்த கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் சோபா ஜென்ஸி, உதவி ஆய்வாளர் காந்திமதி, தலைமை காவலர் சுப்புராஜ் மற்றும் காவலர் பால்தினகரன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 30.05.2021 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தோட்டத்தில் 240 லிட்டர் கள்ளை கைப்பற்றி எதிரியை கைது செய்தும், வடக்கு இலந்தைகுளம் பகுதியில் சின்னச்சாமி என்பவர் தோட்டத்தில் இருந்த 25 லிட்டர் சாராயம் ஊரலைக் கைப்பற்றி எதிரிகள் இருவரையும் கைது செய்த கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர் பால், முதல் நிலை காவலர் மோகன்ராஜ், காவலர்கள் பாலமுருகன், சத்ரியன், பாலகிருஷ்ணன், குருமூர்த்தி ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
குரும்பூரில் இருந்து கிடைத்த ரகசிய தகவலின் படி 3 எதிரிகளை பிடித்து அவர்களிடமிருந்த 2352 மதுபான பாக்கெட்டுகள், மற்றும் பாட்டில்கள், கண்டெய்னர் லாரி, கார் மற்றும் பணம் ரூபாய் 14,51,850/- ஆகியவற்றை கைப்பற்றி தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன், தலைமை காவலர் கோபித்தில்லா, எழில் நிலவன், ராஜ்பரத், சங்கரமூர்த்தி ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி தெர்மல்நகர் மற்றும் கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செமபுதூர் பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காலத்திலும் தேவையான தகவல்களை சிறப்பாக சேகரித்த தெர்மல்நகர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் சிக்டஸ் ஜெனிவர் மற்றும் கொப்பம்பட்டி காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் இராஜகுமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், கடந்த 03.06.2021 அன்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்ததானம் வழங்கி அவரது உயிரை காப்பாற்றிய கோவில்பட்டி போக்குவரத்துபிரிவு காவலர் ராஜகுரு என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 33 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

