அண்ணா பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் காவல் துறையினருக்கான கோவிட்-19 கேர் சென்டரில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர்கள் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் கவச உடை அணிந்து நேரில் நலம் விசாரித்து, பழத்தொகுப்புகளை வழங்கி ஆறுதல் கூறியும், மருத்துவ குழுவினருக்கு நன்றியும் தெரிவித்தார்.
முன்களப்பணியில் அர்ப்பணிப்புடன் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மக்களிடம் நேரடியான தொடர்பால் பாதிப்படையும் சென்னை பெருநகர காவல் துறையினரின் நலன் கருதி , சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் முயற்சியின் பேரில், சென்னை பெருநகர காவல் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து அண்ணா பல்கலை கழக வளாகத்தில் உள்ள ஏசி டெக், நியூ பிளாக் விடுதியில் கொரோனா தொற்றால் குறைந்த அளவில் பாதிப்படைந்து தனிமைப்படுத்தப்படும் காவல்துறையினர், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்க்கு சிசிச்சையளிக்கும் மையமாக ( கோவிட்-19 கேர் சென்டர்) 27.4.2021 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிட் சிசிச்சை மையத்தில் 360 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேர மருத்துவர்கள் பராமரிப்பு, ஆம்புலன்ஸ் வசதியுடன், இலவச தரமான உணவு, மருந்துகள், ஆலோசனைகள் மற்றும் சுவாச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று மதியம் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஐ.பி.எஸ் மேற்படி கோவிட்-19 கேர் சென்டருக்கு நேரில் சென்று, கவச உடை அணிந்து கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 48 காவலர்கள், 2 அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் 32 காவல் ஆளிநர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 82 நபர்களிடம் சமூக இடைவெளியுடன் நேரடியாக உரையாடி நலம் விசாரித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு பழங்கள் மற்றும் உலர் பழங்கள் அடங்கிய சத்துணவு தொகுப்பை வழங்கி விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பணியிலிருந்த மருத்துவர் அபிநயா மற்றும் மருத்துவ குழுவினர், பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பழங்கள் மற்றும், உலர் பழங்கள் அடங்கிய சத்துணவு தொகுப்பை வழங்கி மனமார்ந்த நன்றியை சென்னை பெருநகர காவல் துறை சார்பாக பகிர்ந்தார்கள்.
இது வரை 1,055 காவல்துறையினர், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 656 ஆண்கள், 247 பெண்கள், 22 சிறுவர்கள் என மொத்தம் 925 நபர்கள் கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து நல்ல முறையில் வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையாளர் சாம்சன்,ஐ.பி.எஸ் (பொறுப்பு மைலாப்பூர் காவல் மாவட்டம்), மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பாலப்பிரமணியம் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னை, எழும்பூர் பழைய காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள காவலர் தங்கும் விடுதியில் கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காவல் ஆளிநர்களை கவச உடை அணிந்து சமூக இடைவெளியுடன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தும், பழங்கள் மற்றும் உலர் பழங்கள் அடங்கிய சத்துணவு தொகுப்பை வழங்கி, தங்குமிட வசதிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.

