தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் காவல்துறையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து கடந்த ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் வாரம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இந்நிலையில், சென்னை முழுவதும் உள்ள அனைத்து மேம்பாலங்களையும் மூடி, பிரதான சாலைகளில் 2 கி.மீ இடைவெளியில் ஒரு சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அடையாள அட்டையை காண்பித்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. திருமணங்களுக்கு செல்வோர் அழைப்பிதழை காண்பித்து செல்கின்றனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், போலீசாரின் வாகன தணிக்கை பணியை தீடிரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவரின் உத்திரவின் பேரில் சென்னை மாநகரம் முழுவதும் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக, உதவி ஆணையர் கோடிலிங்கம் சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி இரவு-பகல் என தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை பி1 வடக்கு கடற்கரை காவல்நிலையம் எல்கைக்குட்பட்ட பிராட்வே, என்3 முத்தால்பேட்டை, கொத்தவால்சாவடி, ராஜாஜி சாலை மெயின் ரோடு போன்ற பகுதிகளில் தடுப்பு கம்பி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார் உதவி ஆணையர் கோடிலிங்கம். அவருடன் பி1 கடற்கரை காவல்நிலைய ஆய்வாளர் ஜெபஸ்டினும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
முழு ஊரடங்கை அடுத்து சென்னையில் உள்ள பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. முன்களப் பணியாளர்கள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றன.

அத்தியாவசிய பணிகளை தவிர தேவையில்லாமல் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். விதிமுறைகளை மீறிபவர்களுக்கு அறிவுரை வழங்கி கொரோனா வைரஸ் பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
சென்னை உதவி ஆணையர் கோடிலிங்கம் வாகனச்சோதனையில் காட்டி வரும் அதிரடி காரணமாக, பிராட்வே, என்3 முத்தால்பேட்டை, கொத்தவால்சாவடி, ராஜாஜி சாலை மெயின் ரோடு போன்ற பகுதிகளில் தேவையற்ற வாகனங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை சமூக ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.
செய்திதொகுப்பு: ஆனந்த பாபு
தலைமைச்செயலக செய்தியாளர்.

