தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரையில் உட்புறம் கான்கீரீட் சிமெண்ட் பூச்சு நேற்று நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது பெரிய அளவில் பெயர்ந்து விழுந்ததில்; ஒரு பெண் உயிரிழப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் 7வது தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் நடராஜன் என்பவருக்கு சொந்தமான காம்பவுண்டு உள்ளது. அதில் ஒரு வீட்டில் நடராஜன் குடும்பத்தார் வசித்து வருகின்றனர். இன்னொரு வீட்டில் ராஜமுருகன் என்பவர் தனது குடும்பத்துடன் 5 வருடங்களாக குடியிருந்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்து வருகிறார், இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், பரமேஸ்வரி (22) என்ற மகளும், சுந்தர் (21) என்ற மகனும் உள்ளனர்.
ராஜமுருகன் குடியிருந்து வரும் வீட்டின் மேற்கூரை உட்புறம் 4 வருடங்களுக்கு முன்பு சேதமடைந்துள்ளது, அதை வீட்டின் உரிமையாளரான நடராஜன் கொத்தனார் மூலம் சிமெண்ட் வைத்து பூசி சீர் செய்திருக்கிறார். மேற்படி சிமெண்ட் பூச்சானது நேற்று நள்ளிரவில் ராஜமுருகன் குடும்பத்தார் நான்கு பேரும் தூங்கிக் கொண்டிருந்தபோது பெரிய அளவில் பெயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராஜமுருகன் மகள் பரமேஸ்வரி மற்றும மகன் சுந்தர் மீது விழுந்தது, அதில் படுகாயமடைந்த இருவரையும் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், செல்லும் வழியில் பரமேஸ்வரி உயிரிழந்தார். படுகாயமடைந்த சுந்தருக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் நடந்ததையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உடனடியாக நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்களுக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து வடபாகம் காவல் ஆய்வாளர் திரு. அருள் வழக்குப்பதிவு செய்து, அவரது தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சுந்தர் சிங், தனிப்பிரிவு தலைமைக் காவலர் திரு. நாகராஜன், இரவு ரோந்து போலீசார் உட்பட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


