தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 31ந் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 24 முதல் ஒருவாரக் காலத்துக்குத் தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இருப்பினும் ஒருநாளின் கொரோனா பாதிப்பு 36ஆயிரம் என்பதிலிருந்து 33 ஆயிரம் என்னும் அளவுக்கே குறைந்துள்ளது. மே 31ஆம் நாள் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றாலும், பாதிப்பு எண்ணிக்கை தற்போது சிறியளவில் குறைந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், வருவாய்த் துறைச் செயலாளர், டிஜிபி, சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோர் பங்கேற்றனர். தளர்வில்லா ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், ஏதேனும் தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்தக் கூட்டத்துக்குப் பின் மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ வல்லுநர் குழு, சட்டமன்ற உறுப்பினர் குழுவுடனும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது. அதன் பின்னர் ஓரிரு நாட்களில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை 31ம் தேதிக்கு பிறகு முழுஊரடங்கு நீட்டிப்பு செய்வதாக இருந்தால், அதற்கு முன்னோட்டமாக கடந்தமுறை போன்று ஒருநாள் மட்டும் கடை திறக்க அனுமதி அளிக்கும்பட்சத்தில் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடி விடுகிறது. இதனால், கொரானா வைரஸ் நோய் தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒருநாள் மட்டும் கடைகளை திறக்க அனுமதிக்காமல், எந்தவித தளர்வுமின்றி ஊரடங்கு கட்டுப்பாட்டை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும் எனவும், அத்தியாவசிய பொருட்களான காய்;கனிகள், பழங்கள் ஆகியவவை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு மூலம் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு வீடு வீடாக விநியோகம் செய்வதை துரிதப்படுத்த வேண்டும், கொரானா தொற்று குறைந்து வரும் நேரத்தில் தளர்வுகள் இன்றி முழு ஊரங்கு இன்னும் ஒருவார காலம் கடைப்பிடிக்கப்பட்டால் தொற்று எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருவதால், மாண்புமிகு தமிழக முதல்வர் தாங்கள் இந்த விசயத்தில் நல்லதொரு தீர்வு கான வேண்டுமென தலைமைச்செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

