நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கும் வகையில், மகேந்திரிகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 8 டன் ஆக்சிஜன் டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் கரோனா பரவல் 2-வது அலையைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா தொற்று ஏற்பட்டு மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகிறவர்களை நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சுமார் 800 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாகவும் படுக்கைகளை அமைத்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் நாளுக்கு நாள் ஆக்சிஜன் தேவைப்பாடு அதிகரித்து வருகிறது.
நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜனை சேமித்து வைப்பதற்காக 2 பெரிய கொள்கலன்கள் உள்ளன. அங்கிருந்து குழாய் மூலம் நோயாளிகளின் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது. ஆக்சிஜன் தேவைப்பாடு அதிகரித்து வருவதால், திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் இருந்து டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு கொள்கலன்களில் நிரப்பப்படுகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து மருத்துவ தேவைக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு சென்னைக்கு டேங்கர் லாரியில் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மகேந்திரிகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 8 டன் ஆக்சிஜனை டேங்கர் லாரியில் ஏற்றி நேற்று நெல்லை அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக கொண்டு வந்தனர். தொடர்ந்து ஆக்சிஜனை கொள்கலனில் நிரப்பினர்.
இதேபோன்று திருச்சியில் இருந்தும் 2 நாட்களுக்கு ஒரு முறை டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சிலிண்டர்களில் நிரப்பப்பட்ட ஆக்சிஜனும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இங்கு காலியாகும் சிலிண்டர்களை திருச்சிக்கு எடுத்து சென்று, ஆக்சிஜனை நிரப்பி கொண்டு வருகின்றனர். நெல்லை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கண்காணித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

