தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து இன்று (ஏப்ரல் 20) சென்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுதும் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இதனால் உடல் நலக் குறைவும் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உடல் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அவருக்கு குடல் இறக்கம் நோய் (ஹெர்ணியா) இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதற்கு உடனே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்தார். இதை தொடர்ந்து அவருக்கு மயக்க மருந்து கொடுத்து ‘லேப்ராஸ்கோப்’ கருவி மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சில மணி நேரத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. மயக்கம் தெளிந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறிது நேரம் ‘வலி’ தெரிந்தது. அதன்பிறகு அவரது உடல் நிலை சீராக தொடங்கியது. அவரை அருகில் இருந்து மனைவி மற்றும் குடும்பத்தினர் கவனித்துக் கொண்டனர். மருத்துவமனையில் நேற்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘ஜூஸ்’ போன்ற திரவ உணவுகள் வழங்கப்பட்டன. இதில் அவரது உடல்நிலை சாதாரண நிலைக்கு திரும்பியது. எழுந்து நடக்க ஆரம்பித்தார்.
ஆனாலும் டாக்டர்கள் அவரை ஒரு நாள் மருத்துவமனையில் இருக்குமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் நேற்று மருத்துவமனையில் தங்கினார்.இன்று காலையில் எழுந்ததும் அவர் நன்றாக குணம் அடைந்திருந்ததால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் அடையாற்றில் உள்ள அரசு வீட்டுக்கு திரும்பினார். 3 நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

