தமிழகத்தில் கரோனா 2-வது அலை கைமீறிச் சென்றுவிட்டது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜராகியிருந்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம், கரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில், கடந்த ஆண்டைவிட மோசமாக இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். கரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் எதுவும் உள்ளதா? என்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி விளக்கம் கோரினார்.
கரோனாவின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போதிய இருப்பு உள்ளது என்றும், நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்க சுகாதாரத் துறைச் செயலாளர்தான் சரியான நபர் என்பதால், அவரை நீதிமன்றம் வரச் சொல்வதாகத் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி இன்று மதியமே சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தலைமை நீதிபதியை இன்று மதியம் அவரது இல்லத்தில் சுகாதாரத் துறைச் செயலர் சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளார்.

