இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதவி காலம் நாளை முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடைய பதவிக்காலம் 2022 மே 14-ந் தேதிவரை உள்ளது. அதுவரை அவர் இந்த பதவியில் நீடிப்பார்.
சுஷில் சந்திரா தற்போது தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இந்த பணியில் இருந்து வந்த நிலையில் இப்போது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சுஷில் சந்திரா ஐ.ஆர்.எஸ். தேர்வில் வெற்றி பெற்று மத்திய அரசு பணிக்கு வந்தார். பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த அவர், மத்திய நேரடி வரித்துறை சேர்மனாகவும் இருந்துள்ளார். சுஷில் சந்திராவின் பதவிக் காலத்தில் உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

