தூத்துக்குடியில் கர்ணன் திரைப்படம் வெளியாகியுள்ள சினிமா தியேட்டரில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி போல்டன்புரத்தில் ஒரு தியேட்டரில், தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு காட்சிக்கு படம் பார்க்க வந்தவர்களின் 5பேர் குடிபோதையில் இருந்துள்ளனர். இதனால் தியேட்டர் நிர்வாகத்தினர், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து, டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்து திருப்பி அனுப்பி விட்டார்களாம். இந்நிலையில் தியேட்டருக்குள் அனுமதிக்காததால் ஆத்திரத்தில் மீண்டும் தியேட்டருக்கு வந்த அவர்கள் இரவு 11 மணியளவில் தியேட்டர் வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
இதில் 5 குவார்ட்டர் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி வீசியதில் அது தரையில் விழுந்து வெடித்ததது. ஆனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை டவுண் டிஎஸ்பி கணேஷ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது தொடர்பாக தியேட்டரில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


