சிறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக கூறி நீதிபதி முன்பு,ஆயுள் தண்டனை கைதி ஒருவர் கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்ட சம்பவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் பாண்டியன். கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், மீது சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வேறு ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக பாண்டியன், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரது வழக்கை நீதிபதி ரவி விசாரணைக்கு எடுத்தபோது, நீதிபதியிடம் சிறையில் அதிகாரிகள் தன்னை மிகவும் கொடுமைப்படுத்துவதாக அழுதபடி புகார் கூறினார்.
பின்னர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து தன் கழுத்தை அறுக்க தொடங்கினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், விரைந்து செயல்பட்டு, அவரிடம் இருந்த பிளேடை பறித்தனர்.அங்கிருந்தவர்கள், கழுத்தில் இருந்து வரும் ரத்தத்தை நிறுத்த, அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். உடனடியாக வாகனத்தில் ஏற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பாண்டியனை போலீசார் அழைத்து சென்றனர். மருத்துவமனையில், அவருக்கு 14 தையல்கள் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. நீதிபதி கண் எதிரே ஒரு கைதி தனது கழுத்தை அறுத்த சம்பவம் உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவரது வக்கீல் கூறும்போது, ‘‘புழல் சிறையில் தண்டனை கைதியாக இருக்கும் பாண்டியன், சிறை நிர்வாகம் தரும் வேலையை செய்கிறார். இதற்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியத் தொகையில் பாதியை ஒரு அதிகாரி பறித்துக்கொண்டார். இதுகுறித்து பாண்டியன் புகார் செய்ததால், சிறை அதிகாரிகள், ஒன்று சேர்ந்து கொண்டு பாண்டியனை கொடுமை செய்கின்றனர். தண்டனை சிறையில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகள் அடைக்கப்படும் சிறைக்கு பாண்டியனை மாற்றியுள்ளனர். பழிவாங்கும் நோக்கில் பாண்டியனை கொடுமை செய்வதால், கொடுமையை தாங்க முடியாமல், நீதிபதி முன்பு தற்கொலை செய்ய அவர் முற்பட்டுள்ளார்’’ என்று கூறினார்.
