தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் கடை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், இப்பகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஊர்வசி அமிர்தராஜ் நல்ல வேட்பாளர், சமூக சேவகர், ஏழைகளுக்கு உதவுபவர், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என குணம் உள்ளவர்.
அவருக்கு கை சின்னத்தில் வாக்கு தாருங்கள். கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். அதுவெல்லாம் நம் கையில்தான் உள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கான காரணம் இன்னும் யாருக்கும் தெரியவில்லை, அதன்படி முதல்வராக வந்த எடப்பாடி வந்தபிறகு பஸ்கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் விலை உயர்ந்து விட்டது. பெட்ரோல் டீசல் விலை ஏறி கொண்டே இருக்கிறது.
தான் முதல்வராக ஆனதும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உடைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதை கேட்டு அனைத்து அதிமுகவினரும் குஷியாகி திமுக கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். கரோனா காலத்தில் இந்த ஆட்சி பல கோடி மோசடி செய்துள்ளது. திமுக கூட்டணியினர் அனைவரும் நல்ல எண்ணத்துடன் வாக்கு கேட்டு வருகின்றனர். மதுவிலையும் ஏற்றம் கண்டு விட்டது. இந்த ஆட்சியின் அவல நிலை பார்த்து எப்போது தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது தேர்தல் வந்து விட்டது.
புதுசா கட்சி ஆரம்பித்தவர்களெல்லாம் முதல்வர் ஆகிவிடலாம் என கனவு காண்கின்றனர். உங்கள் வாக்கு சிதறாமல் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜிக்கு கை சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள், ஊர்வசி அமிர்தராஜ் கடந்த 11 ஆண்டுகளாக இந்த தொகுதியில் ஏழைகளுக்கு பல உதவிகள் செய்து வருகிறார். அவரை சட்டமன்றத்துக்கு அழைத்து செல்வது உங்கள் கையில் தான் உள்ளது. மறந்து விடாதீர்கள். கை சின்னத்துக்கு ஆதரவு தாருங்கள் என்றார்.
அப்போது அவருடன் மாவட்ட துணைத் தலைவர் சங்கர், சாத்தான்குளம் நகர காங்கிரஸ் தலைவர் வேணுகோபால், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஜோசப் அலெக்ஸ், சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயலர் ஜோசப், நகர தலைவர் இளங்கோ, ஒன்றிய கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர், ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய செயலர் பார்த்திபன், ஒன்றிய அவைத் தலைவர் கோயில்ராஜ், கிளை செயலர்கள் ஜான், ஜாண்சன், ஞானஜேம்ஸ். ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் திருமணி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

