கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரியில் வ.உ.சி கல்லூரி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சி இன்று (29.03.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், பங்கேற்று வாக்காளர் விழிப்புணர்வு குறும்பட குறுந்தகட்டினை வெளியிட்டார். பின்னர் ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடி வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வாக்காளர் விழிப்புணர்வு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
கரோனா காரணமாக தேர்தல் ஆணையம் 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளை இரண்டாக பிரிக்க அறிவுறுத்தியதன் அடிப்படையில் தற்போது 2097 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குசாவடியில் பணியாற்ற 10,064 வாக்குசாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வருவாய் துறை, காவல் துறை மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த 8,000 நபர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயக பணியில் நமது மாவட்டத்தில் 20,000க்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட உள்ளனர். தூத்துக்குடி வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரியில் புதிதாக வாக்களிப்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். 5 வருடம் என்பது மிக நீண்ட நாட்களாகும். 5 வருடங்களில் நமது வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். குறிப்பாக இளம்வயதான நீங்கள் திருமணமாகலாம், உயர்கல்வி முடித்து பல்Nவுறு உயர் பதவிகளுக்கு செல்லலாம் உள்பட பல்வேறு மாற்றங்கள் நிகழும். எனவே நீங்கள் உங்களது வாக்கை உண்மைக்காக வாக்களிக்க வேண்டும்.
மனசாட்சியின்படியும், சுதந்திரமாகவும் அடுத்த 5 வருடங்களை தீர்மானிக்கப்போகின்ற தேர்தல் என்பதை யோசித்து வாக்களிக்க வேண்டும். நாம் சுதந்திரம் பெற பலர் ரத்தம் சிந்தியுள்ளனர். நாம் ஓட்டுரிமை பெறவும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்தியா ஜனநாயக நாடாக திகழவும் பல்வேறு கஷ்டங்கள் பட்டுள்ளோம். இதையெல்லாம் உணர்ந்து தேசிய ஜனநாயக கடமையாற்றிட அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பேசினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், இ.ஆ.ப,, துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஸ்குமார், வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வீரபாகு மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

