தூத்துக்குடி, பிப், 9
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா, தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் இளம் பகவத் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் இணைந்து தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 16 இடங்களில் 1,702 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இது தவிர, ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றும் 42 பேருக்கு மதிய உணவும், 48 பேருக்கு இரவு உணவும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக தூத்துக்குடி மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ஆண்டுக்கு ரூபாய் 2 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு டிபன் பாக்ஸ் மற்றும் லஞ்ச் பேக் வழங்கப்பட்டது.
விழாவில், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி பொறியாளர் தமிழ்ச்செல்வன், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் வேலாயுதம், நகர் நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர், பிரித்திகா, பிரகதி, ஆறுசாமி, ராம்குமார், இளநிலை பொறியாளர் பாண்டி, உதவி செயற்பொறியாளர்கள் ராஜேஷ்கண்ணா, ஹரிகிருஷ்ணன், தொழிற்நுட்ப உதவியாளர் சரண்பிரசாத், மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழுத்தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் மும்தாஜ், தனலட்சுமி, மரிய கீதா, ராமு அம்மாள், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், மற்றும் மணி, தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

